|
||
![]() |
![]() |
|
இந்தியமொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன்முதலில் அகராதி உருவாக்கப்பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம் 1936இல் தமிழில் பேரகராதியை உருவாக்கியது.
ஒருகாலத்தில் இந்தியமொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தை மூலமாகக்கொண்டு அதிலிருந்துதான் உருவாயின என்று கூறப்பெற்றது. இராபர்ட் கால்டுவெல்தான் சமற்கிருதத்திற்குத் தொடர்பேயில்லாத சில மொழிகள் இருப்பதாகவும் அவை ஒரு மொழிக்குடும்பத்திற்குள் அடங்குமென்றும் ஆராய்ந்து அவற்றிற்கான ஒப்பியல் இலக்கணத்தையும் உருவாக்கினார். அவர் கூறிய மொழிக்குடும்பமே தமிழை முதன்மையாகக்கொண்ட திராவிடமொழிக்குடும்பம். திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப் பழைமையான மொழியும் தொன்மையான மொழியும் தமிழாகும்.
சமற்கிருதத்தின் துணையில்லாமல் தமிழ் இயங்கக்கூடியது. மேலும் தமிழ்மொழியின் சொற்களுக்கான வேர்மூலங்களும் தமிழாகவே உள்ளன. எனவே தமிழ் எந்த மொழியையும் சாராத, தனித்தியங்கவல்ல மொழி என்று நிறுவுவதற்குத் தமிழ்ச்சொற்களின் சொற்பிறப்பியலைத் தொகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஞானப்பிரகாசர், மாகறல் கார்த்திகேயனார் போன்றவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முழுவதுமாக அப்பணியைச் செய்யவில்லை.
தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பியல் தொடர்பாக வேர்ச்சொற்கட்டுரைகள், முதற்றாய்மொழி போன்ற ஆய்வுநூல்களை வெளியிட்டார். அனைத்துத் தமிழ்மொழிச் சொற்களுக்கும் சொற்பிறப்பியல் கண்டுபிடிப்பதற்காக ஒரு துறையையே உருவாக்கித்தர வேண்டுமென்று தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்தார். அப்போது தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டிருந்த அறிஞர் பெருமக்களும் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணரின் கருத்தையே வழிமொழிந்தார்கள்.
அக்கோரிக்கையைக் கனிவாக ஏற்றுக்கொண்ட அப்போதைய தமிழ்நாட்டரசு 1974ஆம் ஆண்டு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைத் துறைத்தலைமை இயக்ககமாகத் தோற்றுவித்தது.
உலக மொழிகளில் தொன்மைமிக்கதும் இலக்கணச்செறிவுடையதும் பல்வேறு துறைகளிலும் இலக்கியவளம்கொண்டதும் மிகவிரைவாக வளர்ந்துவரும் அனைத்து அறிவியல்துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்ததுமான தமிழ்மொழியில், சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்குரிய வழிகாட்டுதல் வேண்டும். அதற்குக் காலந்தோறும் அகராதிகள் உருவாக்கப்பெறவேண்டும்.
தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும் கல்வியாளர்களும் பெறவேண்டுமெனில், தமிழின் வேர்மூலங்களை வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் அவர்களுக்குப் பெருந்துணைபுரியும்.
அந்தவகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில், தமிழ்ச்சொற்களுக்குச் சொற்பிறப்பியலுடன் கலந்த பேரகரமுதலியை உருவாக்கும்பணி 1974இல் தொடங்கி 2011இல், அதாவது 38 ஆண்டுகளில் 13,270 பக்கங்களில் 31 தொகுதிகளை உருவாக்கியபோது நிறைவுற்றது.
இவ்வியக்ககம் 31 தொகுதிகளையும் சுருக்கி 1000 பக்க அளவில் சுருக்கப்பதிப்பு ஒன்றை ஒரே தொகுதியாகவும் 500 பக்க அளவில் வினைச்சொல் அகரமுதலி ஒன்றை ஒரே தொகுதியாகவும் 2016இல் உருவாக்கியது. 1300 மூலமான சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றிற்கான வேர்ச்சொற்களை மட்டும் எடுத்து ‘வேர்ச்சொல் சுவடி’ என்ற நூலையும் 1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குக் கலப்பில்லாத தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தும்வண்ணம் ‘நற்றமிழ் அறிவோம்’ என்ற தூயதமிழ் அகராதியையும் வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டது.
சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கத்திற்கென்றே தொடங்கப்பெற்ற செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அப்பணியை நிறைவு செய்தவுடன், பயனாளர்களை நோக்கிய பல்வேறு பொருண்மைகளில் அகரமுதலிகளைத் தொடர்ந்து உருவாக்குவதுடன், 2016ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க்கலைச்சொற்கள் உருவாக்கும் பணியையும் இடையறாது மேற்கொண்டுவருகிறது.
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றக் காலத்தில் அனைத்துத் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கவேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் அகரமுதலி இயக்ககத்தில் உருவாக்கப்பெறும் தமிழ்க்கலைச்சொற்கள் ‘சொற்குவை’ (sorkuvai.tn.gov.in) வலைத்தளத்தின் வழியாக உலகமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டரசின்கீழ் இயங்கும் மற்ற துறை இயக்ககங்களைப் போலல்லாமல் அகரமுதலி இயக்ககம் சொல்லாராய்ச்சிப் பணிகளையே முகாமையாகச் செய்துவருகிறது. சொல்வளமே மொழிநலம் என்பதால் அகராதிப்பணிகளால் தமிழ்ச்சொற்களைக்காத்தும், கலைச்சொல்லாக்கப்பணியால் தமிழின் சொல்வளத்தைப் பெருக்கியும்வருகிற இவ்வியக்ககம் தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும் காப்புக்கும் ஆணிவேராகத் திகழ்கிறது. மொழியின் காப்புக்கும் மேம்பாட்டுக்கும் தனி இயக்ககம் கட்டாயம் தேவை என்றும் அவ்வியக்ககம் அரசின் நேரிடை ஆளுகைக்குக்கீழ் தனித்து இயங்கக்கூடியதாக இருந்தால்மட்டுமே மொழிக்கான ஆக்கப்பணிகளை இடையறாமல் செய்யமுடியும் என்பதற்கும் இவ்வியக்ககமே சான்றாக விளங்குகிறது.
அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன்பெற்ற மொழி மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். அவ்வாறு ஒருமொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துணைசெய்யும் முதன்மையான பணியை அகரமுதலி இயக்ககம் செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பொருள்விளக்கமளித்து, அச்சொற்கள் தோன்றிவளர்ந்த வேர்ச்சொல் விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன்கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளை உருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுள்ளது; இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.
தமிழ்மொழிக்குப் பெருமைசேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும். இன்றைய கல்விப்புலத்தில் 600 துறைகளுக்கும் மேலாகப் புழங்கும் ஆங்கிலக் கலைச்சொற்களையெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையம்வழியே பொதுவெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றை மீள்வரலகற்றம் (deduplication) செய்து நிரல்படுத்தி, தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்பெற்றுள்ள 14469 என்ற எண்ணிலமைந்த கட்டணமில்லா அழைமையத்தினைத் தொடர்புகொண்டு தமிழ்ச்சொற்கள் தொடர்பான ஐயங்களையும் தமிழுக்கு நிகரான ஆங்கிலச்சொற்களையும் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பெற்றுள்ளது.
1. தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல்.
2. தமிழ்மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல்.
3. தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கத் துணைநிற்றல்.
‘அகரம்’ என்பது ‘அ’ என்ற எழுத்தையும் ‘ஆதி’ என்பது ‘முதல்’ என்ற பொருளையும் குறிக்கும். எனவே தமிழில் ‘அ’ என்னும் எழுத்தை முதலாகக்கொண்டு சொற்களை வரிசைப்படுத்திப் பொருள் சொல்லும் நூல் (அகரம் + ஆதி = அகராதி) அகராதி என்று அழைக்கப்பெறுகின்றது. அகராதியானது அகரமுதலி, அகரவரிசை என்ற வேறுபெயர்களாலும் அழைக்கப்பெறுகின்றது. சொற்களின் களஞ்சியமாகவும் மொழியைக்காக்கும் கூறாகவும் அகராதி விளங்குகிறது.
மொழியில் ஒவ்வொரு காலத்திலும் புதியசொற்கள் சேர்ந்துகொண்டேயிருக்கும். எனவே, மொழியிலுள்ள சொற்களுக்குப் பொருள்தெரிந்துகொள்ள வேண்டிய தேவை எல்லாக் காலங்களிலுமுண்டு. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய நூலான தொல்காப்பியத்திலேயே அகராதிக் கூறுகள் அமைந்திருப்பதை நாம் அறியமுடிகிறது. சொல்லதிகாரத்தின் உரியியலில் 120 சொற்களுக்கும் இடையியலில் சில சொற்களுக்கும் பொருளதிகாரத்தின் மரபியலில் சில சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பெற்றுள்ளன.
தொல்காப்பியம் என்னும் தொடக்கப்புள்ளியைத்தொடர்ந்து சொல்லுக்குப் பொருள்சொல்ல செய்யுள்வடிவிலான நிகண்டுகள் படைக்கப்பெற்றன. சேந்தன் திவாகரம் எனப்படும் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலிய பல நிகண்டுகள் உருவாக்கப்பெற்றன. செய்யுள்வடிவிலான நிகண்டுகள் மனப்பாடம்செய்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தன. அக்காலத்தில் நிகண்டுகளை முழுமையாகக் கற்றவர்களே பெரும்பண்டிதர்களாக மதிக்கப்பெற்றனர். இதனை, "நிகண்டு கல்லாதவன் மண்டு" என்ற பழமொழியினால் அறியலாம்.
நிகண்டுகள் செய்யுள்வடிவில் பொருள் சொல்லிவந்த நிலையில் சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள்சொல்லும் வகையில் 1594ஆம் ஆண்டு சிதம்பர இரேவண சித்தர் அகராதி நிகண்டை இயற்றினார். இவரே ‘அகராதி’ என்ற பெயரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நம் நாட்டிற்கு மதம் பரப்பவந்த ஐரோப்பிய மதப்பரப்புநர்கள் மொழிப்புரிதல், கருத்துப்பரிமாற்றம் ஆகிய தேவைகளைக் கருத்தில்கொண்டு, இருமொழி, பன்மொழி அகராதிகளைப் படைத்தனர். அவ்வகராதிகள் அவர்கள் நம்மொழியைப் புரிந்துகொள்ளவும் நாம் அவர்களின் மொழியைப் புரிந்துகொள்ளவும் உதவின; உதவுகின்றன.
1679இல் ஆந்தம் தெப்ரோயன்சா என்பவர் தமிழ் - போர்ச்சுக்கீசிய அகராதியை இயற்றினார். ஃபாபிரிசியஸ் தமிழ் - ஆங்கில அகராதியையும் இராட்லர் தமிழ்- ஆங்கில அகராதியையும் வின்சுலோ ஆங்கிலம் - தமிழ், தமிழ்-ஆங்கில அகராதிகளையும் இயற்றினார்கள். பிற்காலத்தில் தமிழ்ச்சொல்லுக்கு ஆங்கிலச்சொல்லாலும் ஆங்கிலச்சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லாலும் பொருள்சொல்லும் அகராதிகள் பல படைக்கப்பெற்றதற்கு மேற்கூறிய அகராதிகளே அடிப்படையாக அமைந்தன.
இத்தாலிநாட்டைச் சார்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்னும் இயற்பெரைக் கொண்ட வீரமாமுனிவர் 1732 இல் பெயர், பொருள், தொடை, தொகை என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய சதுரகராதியை இயற்றினார். இந்த அகராதிதான் தற்போதுள்ளவாறு அகரவரிசையில் தமிழ்ச்சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லாலேயே பொருள்கூறும் அகராதிகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அதன்காரணமாகத்தான் வீரமாமுனிவர் "தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்பெறுகின்றார்.
அகராதி என்பது சொல்லுக்குப் பொருள்சொல்லும் நூல். தேவையான நேரங்களில் மட்டும் அதனை எடுத்துப் பொருள்தெரிந்துகொண்டால் போதும் என்ற தவறான எண்ணம் இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கின்றது. சொற்கள் இல்லாமல் மொழியில்லை. எனவே மொழியைக்காக்க வேண்டுமென்றால் சொற்களைக் காக்கவேண்டும். அதற்கு அகராதிகள் தேவை.
தமிழ் நம் தாய்மொழி. அப்படியிருக்க “தமிழ்-தமிழ் அகராதிகள் எதற்குத் தேவை?” என்பது பலரும் கேட்கும் கேள்வி. தமிழ்மொழியானது கல்வெட்டுக் காலம் தொடங்கி கணினிக்காலம் வரையிலான நீண்ட வரலாற்றைக் கொண்ட மொழி; சொல்வளம் நிறைந்த மொழி. எனவே தமிழின் சொல்வளத்தையும் பொருள் ஆழத்தையும் அறிந்துகொள்ள தமிழ் அகராதிகள் தேவை.
சான்றாக, சொல்லுதலின் வகையைக் குறிக்க தமிழில் ஏறத்தாழ முப்பத்தொன்பது சொற்கள் உள்ளன. அவை
| எண் | சொல் | சிறப்புப் பொருள் |
|---|---|---|
| 1. | அசைத்தல் | அசையழுத்தத்துடன் சொல்லுதல். அசையழுத்தம் (Accent) |
| 2. | அறைதல் | அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல் |
| 3. | இசைத்தல் | ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல் |
| 4. | இயம்புதல் | இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல் |
| 5. | உரைத்தல் | அருஞ்சொற்களுக்கு அல்லது செய்யுள்களுக்குப் பொருள் சொல்லுதல் |
| 6. | உளறுதல் | ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல் |
| 7. | என்னுதல் | என்று சொல்லுதல் |
| 8. | ஓதுதல் | காதிற்குள் மெல்லச் சொல்லுதல் |
| 9. | கத்துதல் | குரலெழுப்பிச் சொல்லுதல் |
| 10. | கரைதல் | அழைத்துச் சொல்லுதல் |
| 11. | கழறுதல் | கடிந்து சொல்லுதல் |
| 12. | கிளத்தல் | இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல் |
| 13. | கிளத்துதல் | குடும்ப வரலாறு சொல்லுதல் |
| 14. | குயிலுதல் / குயிற்றுதல் | குயில்போல் இன்குரலிற் சொல்லுதல் |
| 15. | குழறுதல் | நாத் தளர்ந்து சொல்லுதல் |
| 16. | கூறுதல் | கூறுபடுத்திச் சொல்லுதல் |
| 17. | சாற்றுதல் | பலரறியச் சொல்லுதல் |
| 18. | செப்புதல் | வினாவிற்கு விடை சொல்லுதல் |
| 19. | நவிலுதல் | நாவினால் ஒலித்துப் பயிலுதல் |
| 20. | நுதலுதல் | ஒன்றைச் சொல்லித் தொடங்குதல் |
| 21. | நுவலுதல் | நூலின் நுண்பொருள் சொல்லுதல் |
| 22. | நொடித்தல் | கதை சொல்லுதல் |
| 23. | பகர்தல் | பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல் |
| 24. | பறைதல் | மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல் |
| 25. | பன்னுதல் | நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல் |
| 26. | பனுவுதல் | செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல் |
| 27. | புகலுதல் | விரும்பிச் சொல்லுதல் |
| 28. | புலம்புதல் | தனக்குத்தானே சொல்லுதல் |
| 29. | பேசுதல் | ஒருமொழியிற் சொல்லுதல் |
| 30. | பொழிதல் | இடைவிடாது சொல்லுதல் |
| 31. | மாறுதல் | உரையாட்டில் மாறிச் சொல்லுதல் |
| 32. | மிழற்றுதல் | மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல் |
| 33. | மொழிதல் | சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல் |
| 34. | வலத்தல் | கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல் |
| 35. | விடுதல் | மெல்ல வெளிவிட்டுச் சொல்லுதல் |
| 36. | விதத்தல் | சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல் |
| 37. | விள்ளுதல் | வெளிவிட்டுச் சொல்லுதல் |
| 38. | விளத்துதல் | (விவரித்துச்) சொல்லுதல் |
| 39. | விளம்புதல் | ஓர் அறிவிப்பைச் சொல்லுதல் |
இதுபோல் தமிழ்மொழியில் ஒரு பொருளுக்கு நுணுக்கம், பொருள் வேறுபாடு கருதி பல சொற்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றைத் தமிழ்மொழியைப் பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்திருக்க வழியில்லை. அவற்றைப் பொதுப்படப் பதிவுசெய்திருந்தால் மட்டுமே அனைவரும் பயன்படுத்தமுடியும். அப்பொதுப் பதிவே அகராதியாகும். எனவே அகராதி முகாமையான நூலாகிறது. மொழி வளர்ச்சியடைய இதன் தேவையும் அதிகமாகிறது.
காலந்தோறும் சொற்களின் பொருள்மாற்றத்தை அறிந்துகொள்ளவும் அகராதிகள் தேவை. சான்றாக, சங்க இலக்கியங்களில் ‘நாற்றம்’ என்ற சொல் 'நறுமணம்' என்ற பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. ஆனால் இன்று அச்சொல் 'தீமணம்' என்ற பொருளில் மட்டுமே பயன்பாட்டிலுள்ளது. இதுபோன்ற சொற்பொருள் மாற்றங்களை உணரவும் அகராதிகள் தேவை.
அகராதிகள் சொற்களின் பொருளை மட்டும் பதிவுசெய்யாமல்,
| எண் | அகராதிகள் பதிவுசெய்யும் தகவல்கள் |
|---|---|
| 1. | சொற்களின் வகைப்பாடு |
| 2. | சொற்களின் பலுக்கல் (உச்சரிப்பு) முறை |
| 3. | தமிழில் காலந்தோறும் பொருள் மாறுபாடு |
| 4. | ஆங்கிலத்தில் இணையான பொருள் |
| 5. | இவற்றிற்கு மேற்கோள்கள் |
| 6. | (பிறமொழிகளில்) இனச்சொல் |
| 7. | சொற்பிறப்பியல் |
எனப் பல கூறுகளையும் அகராதி உள்ளடக்கிப் பதிவுசெய்கின்றன.
சொற்களைக்காக்கவும் அதன்வழியே மொழியைக்காக்கவும் தமிழின் சொல்வளம் அறியவும் மொழியின் சொல்லாழம் சொல்லவும் சொற்களின் பொருள் மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும் மொழியின் தொன்மையை உணர்த்தவும் அகராதிகளைக் காலந்தோறும் உருவாக்கவேண்டியது கட்டாயமாகும்.
ஒவ்வொரு மொழியிலும் அகராதிகள் உருவாக்கப்பெற்று அம்மொழிகளைக் காத்துநிற்பது போல் அருந்தமிழையும் அகராதிகள் காக்கின்றன.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகள் 1974இல் தொடங்கி 2011 வரை 13,327 பக்கங்களில், 12 மடலங்களைக்கொண்ட 31 தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன. இவை இலக்கணக்குறிப்புகள், தூயதமிழில் சொற்பொருள், ஆங்கில விளக்கங்கள், பொருத்தமான மேற்கோள்கள், வேர்ச்சொல் விளக்கங்கள், இனச்சொல் குறிப்பு ஆகியவற்றுடன் தேவையான இடங்களில் படங்களுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் வெளியிடப்பெற்றுள்ளன.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகள் (31 தொகுதி 13,327 பக்கங்கள்) இற்றைப்படுத்தம் (Update) செய்து திருத்திய பதிப்பாக 7 தொகுதிகளில் வானவில் வண்ணத்தில் வெளியிடப்பெற்றுள்ளன. 31 தொகுதிகளிலிருந்த பொருள் விளக்கக்கூறுகள் திருந்திய பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளின் 31 தொகுதிகளிலுள்ள செய்திகள் பயனாளர்கள் பலரைச் சென்றுசேரும் வகையிலும் 31 தொகுதிகளையும் மொத்தமாக வாங்கவியலாதவர்களின் பொருளியல்சூழல் கருதியும் 31 மடலங்களிலிருந்தும் முகாமையான, புழக்கத்திலுள்ள சொற்களைமட்டும் தெரிந்தெடுத்துத் தொகுத்து 884 பக்கங்களில் சுருக்கப்பதிப்பு ஒரே தொகுதியாக வெளியிடப்பெற்றுள்ளது.
செந்தமிழிலுள்ள முகாமையான வினைச்சொற்களை ஒன்றுதிரட்டி, சொல் பலுக்கல், இலக்கணக்குறிப்பு, பொருள்கள், ஆங்கில விளக்கம், எடுத்துக்காட்டுகள், தமிழ்க் கிளைமொழிகளிலுள்ள வழக்கு என அனைத்துவகைக் குறிப்புகளுடன் ‘தமிழ் வினைச்சொல் அகரமுதலி’ 408 பக்கங்கள் கொண்ட ஒரே தொகுப்பாக வெளியிடப்பெற்றுள்ளது.
புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் வகையிலும், அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தமிழ்ப்பாடத் தேர்வர்களுக்குப் பயன்படும் நோக்கிலும் தமிழ்வேர்ச்சொற்களைத் தொகுத்து ‘வேர்ச்சொல் சுவடி’ என்னும் நூல் 5000 படிகள் அச்சிடப்பெற்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் பள்ளிக்கு ஒரு படியெனப் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் வழியே வழங்கப்பெற்றன.
தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் தங்கள் இல்லத்திலுள்ள பொருள்களைத் தூயதமிழில் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்ச்சொற்களைத் தொகுத்து வண்ணப்படங்களுடன் நற்றமிழ் அறிவோம் (எ) தூய தமிழகராதி 50,000 படிகள் அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திற்கும் பள்ளிக்கு ஒரு படியெனப் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் வழியே வழங்கப்பெற்றன.
நடைமுறையில் பெருமளவில் பயன்படுத்தப்பெறும் தமிழ்ச்சொற்களை ஒருங்கே தொகுத்து அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த அகரமுதலி உருவாக்கி வெளியிடப்பெற்றுள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தமிழிலக்கியங்களிலுள்ள பழந்தமிழ்ச்சொற்களைப் பிறர் உதவியின்றித் தாங்களே படித்துப் புரிந்து நன்கு உள்விளங்கிக்கொள்ளும் வகையில் இந்த அகரமுதலி வெளியிடப்பெற்றுள்ளது.
நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கையில் தேவையின்றிப் பிறமொழிச் சொற்களை வலிந்துபேசிய சிலரால் பல அயற்சொற்கள் மக்களைத் தொற்றிக்கொண்டுள்ளன. இவற்றைக்களையும் வகையிலும் அயற்சொற்களுக்கான அழகு தமிழ்ச்சொற்களை நினைவூட்டும்வகையிலும் இந்த அயற்சொல் அகராதி உருவாக்கி வெளியிடப்பெற்றுள்ளது.
தமிழ்மொழியிலுள்ள மாற்றொலியன் எழுத்துகள் (ண, ந, ன, ர, ற, ல, ள, ழ) தவறான பயன்பாட்டில் பொருள்மாற்றம் பெற்றுவிடுகின்றன. எனவே அவற்றைத் தெளிவிக்கும் வகையில், தமிழிலுள்ள மயங்கொலிச் சொற்களைத் திரட்டி அவற்றிற்கான பொருள் விளக்கங்களைத் தெளிவிக்கும்வகையில் இந்த அகராதி உருவாக்கி வெளியிடப்பெற்றுள்ளது.
அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு உடன்கணிப்பேடு (Ready Reckoner) போலப் பயன்படும் வகையில் தமிழிலுள்ள அடிப்படைச் சொற்களை எல்லாம் ஒருங்குதிரட்டி பையடக்க அகராதி (தமிழ்-தமிழ்) வெளியிடப்பெற்றுள்ளது.
தமிழ்மொழியில் ஒரு பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்கள் அதன் நுணுக்க வேறுபாடுகளைக்கொண்டு அமைந்துள்ளன. இலக்கியங்களிலும் வாழ்வியல் நடைமுறையிலும் அத்தகைய சொற்கள் அமைந்துள்ளன. அவற்றைத் தொகுத்து ஒருபொருட்பன்மொழி அகராதி வெளியிடப்பெற்றுள்ளது
தமிழ்மொழியின் பேச்சுப்பரப்பு விரிந்து உலகெங்கணும் பரவியுள்ளது. ஒரு கருத்திற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் வெவ்வேறு சொற்கள் பயன்பாட்டிலுள்ளன. ஒரு வட்டாரத்தில் பேசும் சொற்கள் மற்ற வட்டார மக்களுக்குப் புரிவதில்லை. எனவே தமிழில் வழங்கும் வட்டாரச்சொற்களைத் தொகுத்து அனைவருக்கும் புரியும்வண்ணம் பொதுத்தமிழில் பொருளெழுதி வட்டார வழக்குச் சொற்பொருளகராதி வெளியிடப்பெற்றுள்ளது.
தமிழ்மொழியிலுள்ள ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழிவழியாக (மரபுவழியாக) வழங்கிவரும் பொருளை உணர்த்துவதனை விளக்கும்வகையில் மரபுத்தொடர் அகராதி உருவாக்கி வெளியிடப்பெற்றுள்ளது.
வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் காலத்திற்கேற்ப அனைத்துத் தளங்களிலும் தமிழ்ப் பயன்பாட்டினை அதிகரிக்கச்செய்யும் வகையில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்பெறும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கம் செய்யும்வகையில், முதலாவதாக மருத்துவத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பயன்படுத்தப்பெறும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க்கலைச்சொற்களடங்கிய மருத்துவக் கலைச்சொல்லகராதி வெளியிடப்பெற்றுள்ளது.
சொல்லாய்வுகள், துறைசார் கலைச்சொற்கள், அகராதியில், மொழியியல், வட்டார வழக்கு உள்ளிட்ட பொருண்மை சார்ந்த கட்டுரைகள், தமிழ்மொழி குறித்த செய்திகள், இயக்ககச் செற்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கொண்ட “சொல்வயல்” மின்னிதழ் சொற்குவை வலைத்தளத்தில் 2020 சூன்முதல் திங்கள்தோறும் பதிவேற்றம்செய்யப்பெற்றுவருகிறது. மின்னஞ்சல், புலனம் வழியாகவும் பகிரப்பெற்றுவருகிறது.
2021-2022ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பின்படி, அரசுத்துறைகளில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பெறும் ஆட்சிச்சொற்களுக்கு தமிழில் கலைச்சொற்கள் வடிவமைக்கப்பெற்றுத் ’துறைசார் ஆட்சிச்சொல் குறுநூல்கள்’ அச்சிடப்பெற்று, தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது வழங்கப்பெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டிற்கு வரும் பிறமொழியினர் பயன்பெறும் வகையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பன்மொழி அகராதியுடன் கூடிய “தமிழ்ப்பேசி“ குறுஞ்செயலி (Tamilpaesi - Application) மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் 08.11.2023ஆம் நாள் ‘தமிழ் அகராதியியல் நாள் விழா’வில் வெளியிடப்பெற்றுள்ளது. இதனைத் திறன்பேசியிலுள்ள (SmartPhone) செயலிக்குவையிலிருந்து (Play Store) பதிவிறக்கம்செய்து பயன்கொள்ளலாம்.
இன்றைய அறிவியல் தொழில்நுட்பக்காலத்தில் சமூக ஊடகங்களிலும் மக்களின் பேச்சு வழக்கிலும் நிறைந்து காணப்பெறும் பிறமொழிச் சொற்களையும் நாள்தோறும் பெருகிவரும் பல்துறை சார்ந்த பிறமொழிக் கலைச்சொற்களையும் தொகுத்து உடனுக்குடன் அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்க்கலைச்சொற்களை வடிவமைத்து மக்களின் புழக்கத்திற்குக் கொண்டுவரும் உயரிய இலக்கைநோக்கி அகரமுதலி இயக்ககத் “தமிழ்க்கலைக்கழகம்“ 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செயலாற்றிவருகிறது. இவ்வியக்ககப் பணியாளர்களால் வடிவமைக்கப்பெறும் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கலைக்கழக வல்லுநர் குழுவால் சீராக்கம் செய்யப்பெற்று ஏற்பளிக்கப்பெறுகின்றன.
21.11.2016ஆம் நாள் தமிழ்க் கலைக்கழகம் தோற்றுவிக்கப்பெற்று 2018 திசம்பர் வரை மாதத்திற்கு ஒரு கூட்டமும் 2019 சனவரிமுதல் மாதத்திற்கு 2 கூட்டங்களும் நடத்தப்பெற்றுவருகின்றன.
தமிழ்மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் ஒரேதளத்தின்கீழ் ஒருங்குதொகுத்து உலகமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும்நோக்கில் ‘சொற்குவைத்’ திட்டம் செயற்படுத்தப்பெற்றுவருகிறது. இதற்கென்று தனிவலைத்தளம் (www.sorkuvai.com) 05.07.2019ஆம் நாள் சிகாகோவில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தொடங்கப்பெற்று, சொற்கள் பதிவேற்றம்செய்யப்பெற்றுவந்தன. இந்நிலையில் www.sorkuvai.com என்றிருந்த சொற்குவை முகவரியானது அரசின் ஒப்புதலுடன் www.sorkuvai.tn.gov.in என்று மாற்றப்பெற்று மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் 08.10.2024ஆம் நாள் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பெற்றது.
கல்லூரி மாணவர்களிடையே கலைச்சொல்லாக்கத்திறனை வளர்த்தெடுத்து, அவர்களின் தனித்தமிழ்ப்பற்றினை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் ‘சொற்குவை மாணவத்தூதுவர் பயிற்சித் திட்டம்’ செயற்படுத்தப்பெறுகிறது. மாவட்டந்தோறும் கல்லூரிகளிலிருந்தும் கல்லூரிக்கு 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் தேர்வுசெய்யப்பெற்று, 50 மாணவர்கள் என்றவகையில் 4 குழுக்கள் பிரிக்கப்பெற்று, குழுவொன்றிற்கு ஒருநாள் என்ற வகையில் 4 நாள்கள் பயிற்சியளிக்கப்பெறுகிறது. இன்றைய காலத்தில் நாள்தோறும் பெருகிவரும் பலதுறை சார்ந்த சொற்களுக்கு இணையான தமிழ்க்கலைச்சொற்களை உருவாக்குவது குறித்து, தேர்ந்த அறிஞர்களைக்கொண்டு பயிற்சியளித்து, ‘சொற்குவை மாணவத் தூதுவர்’ என்ற சான்றிதழும் வழங்கப்பெறுகிறது.
அகரமுதலி இயக்ககத்தில் செயல்பெற்றுவரும் சொற்குவை - கட்டணமில்லா அழைமையத்தின் 1800-599-14469 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தமிழ்ச்சொற்கள் குறித்த ஐயங்களைக்கேட்டு உரிய விளக்கம்பெறலாம். மேலும், தமிழ்ச்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச்சொற்களையும் ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களையும் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தின்போது துறைசார்ந்த வல்லுநர்களின் உதவி இருந்தால்தான் சரியான, பொருத்தமான, ஏற்புடைய சொற்களை உருவாக்கமுடியும். துறைசார்ந்தவர்களுக்கே அந்தந்தத் துறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்பெறும் சொற்களும் தமிழாக்கம்செய்யவேண்டிய சொற்களும் நன்குதெரியும். எனவே அவ்வல்லுநர்களின் உதவியோடு அச்சொற்களையெல்லாம் தொகுத்து, தமிழில் கலைச்சொல்லாக்கம்செய்து தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதற்குத் துறைசார் வல்லுநர்குழுக்கூட்டம் இன்றியமையாததாகிறது. மூன்று திங்களுக்கு ஒருமுறை என்ற வகையில் ஆண்டுக்கு நான்குமுறை துறைசார் வல்லுநர் குழுக்கூட்டங்கள் நடத்தப்பெறுகின்றன.
2021-2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை அறிவிப்பின்படி, அரசுத்துறைசார்ந்த புதிய தமிழ்க்கலைச்சொற்களை இணையத்தில் அறிமுகம் செய்யும்வகையில் திங்களுக்கொன்று என்றவகையில் கலைச்சொல் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பெற்று தொகுக்கப்பெறும் தமிழ்க்கலைச்சொற்கள் சீராய்வுக்குப்பின் சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம்செய்யப்பெறுகின்றன.
தமிழ் அகராதியியல் அமைப்புமுறைக்கு முன்னோடியாக விளங்கிடும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும்வகையில், தமிழ்நாட்டரசின் நெறிப்படுத்தலின்படி அகரமுதலி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் நாள் ‘தமிழ் அகராதியியல் நாளாகக்’ கொண்டாடப்பெறுகிறது. நவம்பர் 8, 9 ஆகிய இரண்டுநாள்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பெறுவதுடன், தமிழறிஞர்கள், அகராதியியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் ஆய்வுக்கட்டுரைகளடங்கிய ‘அகராதி ஆய்வு மலர்’ வெளியிடப்பெறுகிறது.
தமிழ் அகராதியியல் நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைச்சொல்லாக்கப் போட்டியும் அகராதியியல் தொடர்பான பொருண்மையில் சொல்-பொருள்-படம் என்ற வகையில் ஓவியப்போட்டியும் நடத்தப்பெறுகின்றன.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதற்பரிசாக 10,000/- உருபாயும் இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் 5,000/-உருபாயும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் வழங்கப்பெறுகின்றன.
தூயதமிழிலேயே பேசுகின்றவர்களுள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பெறும் மூவருக்குத் ‘தூயதமிழ்ப்பற்றாளர்’ சான்றிதழும் உருபாய் ஐந்தாயிரம் வீதம் பரிசுத்தொகையும் வழங்கப்பெறுகின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் தேவநேயப் பாவாணர் விருது -1, வீரமாமுனிவர் விருது-1, நற்றமிழ்ப் பாவலர் விருது -2, தூயதமிழ் ஊடக விருது -2, தூயதமிழ்ப் பற்றாளர் விருது -38 ஆகிய 5 வகையான விருதுகள் 44பேருக்கு வழங்கப்பெறுகின்றன.
| எண் | விருது | நபர் | விருது விவரம் |
|---|---|---|---|
| 1. | தேவநேயப் பாவாணர் விருது | 1 | ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை |
| 2. | வீரமாமுனிவர் விருது | 1 | ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை |
| 3. | தூயதமிழ் ஊடக விருது (அச்சு ஊடகம், காட்சி ஊடகம்) | 2 | ரூ. 50 ஆயிரம், தங்கப்பதக்கம்(ரூ. 25 ஆயிரம் மதிப்பில்), தகுதியுரை |
| 4. | நற்றமிழ்ப் பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) | 2 | ரூ. 50 ஆயிரம், தங்கப்பதக்கம்(ரூ. 25 ஆயிரம் மதிப்பில்), தகுதியுரை |
| 5. | தூயதமிழ்ப் பற்றாளர் விருது (மாவட்டந்தோறும் ஒருவர்) | 38 | ரூ. 20 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ் |
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த, அகராதித் துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த அறிஞர் ஒருவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’ தமிழ்நாடு அரசால் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ள இவ்விருதினைப் பெறுவோருக்கு உரூபா ஒரு இலக்கமும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கி, தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கி, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், வெளிநாடுவாழ் அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டிலுள்ள அகராதியியல் அறிஞர்களுள் ஒருவருக்கு ஆண்டுதோறும் வீரமாமுனிவர் விருது வழங்கப்பெறும். இவ்விருது 2020ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பெற்றுவருகிறது.
விருதுத்தொகை ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை
தங்களின் கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி மொழிக்குப் புத்துயிரும் புதுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் இரண்டு பாவலர்களுக்கு ஆண்டுதோறும் நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கபெறும்.
இவ்விருது 2020ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பெற்றுவருகிறது. விருதுத்தொகை ரூ. 50ஆயிரம், தங்கப்பதக்கம் (ரூ. 25ஆயிரம் மதிப்பில்), தகுதியுரை
பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழைப் பயன்படுத்தி ஊடகப் பணியாற்றிவருகிற, அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் (தொலைக்காட்சி மற்றும் வலையொளி) என இரண்டு ஊடகங்களுக்கு ஆண்டுதோறும் தூயதமிழ் ஊடக விருது வழங்கப்பெறும். இவ்விருது 2020ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பெற்றுவருகிறது.
விருதுத்தொகை ரூ. 50ஆயிரம், தங்கப்பதக்கம் (ரூ. 25ஆயிரம் மதிப்பில்), தகுதியுரை
நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், தூயதமிழையே பயன்படுத்துவோரிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவரென மொத்தம் 38 பேருக்குத் தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பெறும். இவ்விருது 2020ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பெற்றுவருகிறது.
விருதுத்தொகை ரூ.20ஆயிரம், பாராட்டுச்சான்றிதழ்
சொற்குவையின் சொற்கள், தமிழ் மின் நூல்கள், அரசுத் தளங்களின் உள்ளடக்கங்கள், அகரமுதலி இயக்கக வெளியீடுகள் போன்றவை விக்கிப்பீடியா (Wikipedia), விக்கிமூலத்தில் (Wikisource) படைப்பாக்கப் பொது உரிமத்தின்கீழ் தரவேற்றம் செய்யப்பெற்றுவருகின்றன.














| முனைவர் இரா.அன்பரசி இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 29.06.2026 - இதுநாள் வரை |
| திருமதி க.பவானி இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 12.03.2024 - 31.05.2026 |
| முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர் |
| 23.08.2021 - 29-02-2024 |
| திரு.த.காமராசு இயக்குநர் |
| 24.05.2018 - 22.08.2021 |
| முனைவர் கோ.செழியன் இயக்குநர் |
| 15.06.2017 - 30.04.2018 |
| முனைவர் கோ.செழியன் இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 11.06.2016 - 14.06.2017 |
| முனைவர் கா.மு.சேகர் இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 01.10.2011 - 11.06.2016 |
| திரு.கூ.வ.எழிலரசு இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 02.09.2011 - 30.09.2011 |
| முனைவர் இரா.மதிவாணன் மதிப்புறு இயக்குநர் |
| 02.09.2008 - 01.09.2011 |
| திரு வை.கண்ணபுரக் கண்ணன் இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 17.06.2008 - 01.09.2008 |
| முனைவர் ம.இராசேந்திரன் இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 04.06.2008 - 16.06.2008 |
| திரு கோ.சந்தானம் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 16.11.2007 - 03.06.2008 |
| திரு து.இராசேந்திரன் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 04.01.2007 - 15.11.2007 |
| திரு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 22.05.2006 - 03.01.2007 |
| முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 22.06.2005 - 21.05.2006 |
| திரு தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 17.07.2001 - 21.06.2005 |
| முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 29.06.2001 - 16.07.2001 |
| திரு சு.இராமகிருஷ்ணன் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 05.07.1999 - 28.06.2001 |
| திரு த.ரா.சீனிவாசன் இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 25.11.1997 - 04.07.1999 |
| திரு வை.பழனிச்சாமி இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 01.02.1996 - 24.11.1997 |
| திரு இரா.கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப. இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 22.11.1995 - 31.01.1996 |
| திரு முத்துபிச்சை இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 01.07.1994 - 21.11.1995 |
| முனைவர் இரா. மதிவாணன் முதன்மைப் பதிப்பாசிரியர் - இயக்குநர் |
| 19.06.1989 - 30.06.1994 |
| இவ்வியக்ககம் தமிழ்வளர்ச்சி இயக்ககத்துடன் இணைக்கப்பட்டது |
| 09.05.1988 - 18.06.1989 |
| திரு இரா. மதிவாணன் இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு |
| 28.01.1981 - 08.05.1988 |
| “மொழி ஞாயிறு” ஞா.தேவநேயப் பாவாணர் இயக்குநர் |
| 08.05.1974 - 16.01.1981 |